Last Updated : 20 Sep, 2024 06:42 PM

 

Published : 20 Sep 2024 06:42 PM
Last Updated : 20 Sep 2024 06:42 PM

தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

களியக்காவிளை சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம்  நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதை பொதுசுகாதாரம், மற்றும் நோய்தடுப்பு துறை இயக்குனர் செல்வ விநாயகம்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில்: “தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை,” என களியக்காவிளை சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வருவோர்களை ஆய்வு செய்த சுகாதாரத்தறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோர்களை சுகாதாரத் துறையினர் இங்கு பரிசோதனை செய்த பின்னரே குமரிக்குள் அனுமதிக்கின்றனர்.

நிபா வைரஸ் பரிசோதனை நடந்து வரும் களியக்காவிளை சோதனை சாவடியை இன்று (செப்.20) குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் குரங்கம்மை, நிபா வைரஸ் நோய் தொற்று பரவலின் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுகாதாரத் துறையால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் காக்கவிளை சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினரால் மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குரங்கம்மை, நிபா வைரஸ் ஆகிய இரு நோய்கள் குறித்து சோதனை சாவடிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் இருப்பின் அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

நிபா வைரஸானது பழந்தின்னி வவ்வால்கள், பன்றிகள் மூலமாக பரவுகிறது. நிபா வைரஸ் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்டவையாகும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதற்கென மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு களியக்காவிளை சோதனை சாவடி வழியாக 392 வாகனங்களில் வந்த 1,043 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை. தமிழகத்தில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு இதுவரை யாருக்கும் இல்லை.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நிபா வைரஸ் குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதோடு, கால்நடைத்துறையினர் மூலம் பன்றிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ள கால்நடைத்துறை இணை இயக்குநர், மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நிபா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகிய நாடுகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருபவர்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் தென்படின் தொடர்ந்து 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டக்கொள்கிறேன், என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர், கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் நபர்களை களியக்காவிளை சோதனை சாவடியில் மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார். ஆய்வில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலர் கிங்சால், மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x