Published : 19 Sep 2024 05:59 PM
Last Updated : 19 Sep 2024 05:59 PM

“ஸ்டாலினை விட அதிகமாக உழைக்கிறார் உதயநிதி” - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கிறார். அவர் ஸ்டாலினை விட அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என வத்திராயிருப்பில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

வத்திராயிருப்பில் திமுக பொது உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (செப்.19) நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேயதாவது: “திமுகவில் இருந்து எம்ஜிஆர், வைகோ போன்றவர்கள் வெளியே சென்றாலும் சேதாரம் இல்லாமல் 75 ஆண்டு காலமாக கட்சி கட்டமைப்புடன் உள்ளது. எங்க அப்பாவின் கட்சி திமுக, என்னுடைய கட்சி திமுக, எனது மகனின் கட்சி திமுக, எங்கள் குடும்பத்தில் அனைவருமே திமுகதான். அதனால் இது குடும்ப கட்சிதான். திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்வதில் எனக்குப் பெருமை.

மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் கூறியபோது கூட்டணி கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால், வெற்றி பெற்றோம். தற்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். விடுபட்ட அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கொடுத்துவிட்டு தான், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க வருவோம்.

அண்ணாவுக்குப் பிறகு, கலைஞரும், அவருக்குப் பிறகு ஸ்டாலினும் திமுகவை வழி நடத்துகின்றனர்.கலைஞரை விட கூடுதலான வெற்றியை ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக உதயநிதி இருக்கிறார். ஸ்டாலினை விட அதிகமாக உதயநிதி உழைத்துக் கொண்டிருக்கிறார். திமுகவை வழிநடத்த அடுத்த தலைவராக உதயநிதி தயாராக இருக்கிறார். நாங்கள் தலைவரை தேட வேண்டியதில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது”: என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x