Published : 19 Sep 2024 06:05 AM
Last Updated : 19 Sep 2024 06:05 AM

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் வாக்குமூல ஆடியோ சமூக ஊடகங்களில் பரவுவதாக குற்றச்சாட்டு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமியிடம் போலீஸார் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும்சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அங்கிருந்த பெண்காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கியதாகக் கூறி பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான தனது 10வயது மகளை சிலர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக வும், எனவே அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சிறுமியின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலாஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரானகூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்இ.ராஜ்திலக், பாதிக்கப்பட்ட சிறுமிதற்போது அவரது பெற்றோருடன் தான் உள்ளார். யாரும் அவரை சட்டவிரோதமாக அடைத்துவைக்கவில்லை என்பதால் இந்தவழக்கு விசாரணைக்கு உகந்த தல்ல என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வழக்கு விசாரணையை போலீஸார் இப்படித்தான் கையாளுவார்களா என்றும், இதற்கு யார் பொறுப்பு? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை போலீஸார் திட்டமிட்டு தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.24-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x