Published : 17 Sep 2024 07:58 PM
Last Updated : 17 Sep 2024 07:58 PM

பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய் மரியாதை - திருமாவளவன் பாராட்டு

சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் திடலில் மரியாதை செலுத்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பாராட்டுக் குறிப்பு: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய்யை பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்த நாளான சமூக நீதி நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த் தூவி வணக்கம் செலுத்தியிருப்பது, அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும், அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது” என பதிவிட்டுள்ளார். முன்னதாக, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் மலர்த் தூவி வணங்கினார்.

விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x