Last Updated : 17 Sep, 2024 05:54 PM

1  

Published : 17 Sep 2024 05:54 PM
Last Updated : 17 Sep 2024 05:54 PM

மாவட்டத்தில் ஒருவருக்கு ‘முதல்வரின் நீர் நிலை பாதுகாவலர் விருது’ - நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

சென்னை: மாவட்டம் தோறும் நீர்நிலைகளை சிறப்பாக பராமரிப்போருக்கான ‘முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது’ வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் இன்று (செப்.17) வெளியிட்ட அரசாணையின் விவரம்: கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், வனத்துறை அமைச்சர், “தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நீர்நிலைகளை பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் 100 பேருக்கு முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும்’’ என அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிர்வாக ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு, தமிழ்நாடு பருவகால மாற்ற திட்ட நிதியில் இருந்து இந்த விருதுக்கான நிதியை வழங்கும் வகையில், கருத்துரு அனுப்பும்படி, சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விருதுத் தொகை ரூ.1 கோடி, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழுக்காக ரூ.2 லட்சம், நிகழ்ச்சிக்காக ரூ.6 லட்சம், இதர செலவாக ரூ.2 லட்சம் என ரூ.1.10 கோடியை வழங்கும்படி கருத்துரு அனுப்பினார். இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, மாவட்டம் தோறும் ஒருவர் என 38 மாவட்டத்துக்கு 38 பேருக்கு விருது வழங்கும் வகையில், ரூ.38 லட்சம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.4 லட்சம் என ரூ.42 லட்சத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x