Published : 17 Sep 2024 06:39 AM
Last Updated : 17 Sep 2024 06:39 AM

காசோலைகளில் கையெழுத்திடும் பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை பறிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தவறான நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடு போன்ற காரணங்களுக்காக பஞ்சாயத்து தலைவர்களின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம், மலுமிச்சம்பட்டி, சிக்கரசம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி அவர்களின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கியஅமர்வு, தமிழ்நாடு பஞ்சாயத்துசட்டப்படி, கிராம பஞ்சாயத்துக்களில் பணிகளை நிறைவேற்றும் வகையில் காசோலைகளில் கையெழுத்திட தலைவரோ, துணைத் தலைவரோ மறுக்கும் பட்சத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரமுள்ளது.

அதேநேரம் தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக காசோலைகளில் கையெழுத்திடும் பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது. இந்த வழக்குகளில், கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் எந்தவொரு விளக்கமும் கோராமல் அவர்களின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவி்ட்டுள்ளார். எனவே அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தவறுசெய்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு எதிராக புதிதாக நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை. ஆனால் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க சட்டத்தில் உள்ள சூழல் அமைந்திருக்க வேண்டும் எனதெளிவுபடுத்தி உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x