Published : 17 Sep 2024 05:50 AM
Last Updated : 17 Sep 2024 05:50 AM

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை

சென்னை: உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் கடந்த ஏப்.24-ம் தேதி இறந்தார். அதையடுத்து அந்த மருத்துவமனைக்கான பதிவை தற்காலிகமாக ரத்து செய்து செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகள்இணை இயக்குநர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடல் எடைகுறைப்புக்கான அறுவை சிகிச்சையை சம்பந்தப்பட்ட நோயாளியின் முன் அனுமதி பெற்றே மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பதிவை ரத்துசெய்வது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கோரவில்லை எனக் கூறி அந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அஜாக்கிரதையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலேயே அந்த இளைஞர்மரணமடைந்ததாகவும், ஆனால் தனி நீதிபதி இந்த அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x