Published : 17 Sep 2024 06:08 AM
Last Updated : 17 Sep 2024 06:08 AM

சென்னை | பாடகர் மனோவின் மகன்களை கும்பல் தாக்குவதுபோன்ற வீடியோ வைரல்: உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை

ஷகீர், ரபீக்

சென்னை: சென்னை ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கிருபாகரன் (20). தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், மதுரவாயல் ஜானகி நகரை சேர்ந்த நிதிஷ் என்ற ஐடிஐ மாணவரும் வளசரவாக்கம் தேவி குப்பத்தில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த 10-ம் தேதி நள்ளிரவு இருவரும் பயிற்சி முடிந்து, பாடகர் மனோ வீட்டருகே உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 4 பேர், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் கிருபாகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த வளசரவாக்கம் போலீஸார், கிருபாகரன், நிதிஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாக்குதல் நடத்தியது பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ஷகீர் (38), ரபீக் (35) மற்றும் அவர்களது வீட்டில் வேலை செய்துவரும் வளசரவாக்கம் தேவி குப்பம் பிரதான சாலை பகுதியை சேர்ந்த விக்னேஷ்(28), தர்மா (23) என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்த வளசரவாக்கம் போலீஸார், விக்னேஷ், தர்மாவை கைது செய்தனர். மனோவின் மகன்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இதனிடையே, தனது மகன்களை சிலர் தாக்கியதாக மனோவின் மனைவி கூறியிருந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மனோவின் மகன்களை 10-க்கும் மேற்பட்டோர் கட்டை, கல் உள்ளிட்ட பொருட்களால் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x