Published : 17 Sep 2024 05:40 AM
Last Updated : 17 Sep 2024 05:40 AM

முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்து

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பழவூர்கோயிலில் 2005-ல் 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி என்ற கிராமத்தில் 2008-ல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த காதர் பாஷா பறிமுதல் செய்தார்.

இந்நிலையில், இந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு காதர் பாஷா விற்பனை செய்துவிட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு, அப்போதையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார். அப்போது காதர் பாஷா திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த காதர் பாஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘பொன் மாணிக்கவேல், சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டுதன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த மாதம் 30-ம் தேதி அவருக்கு முன்ஜாமீன் வழங்கி, 4 வார காலத்துக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பொன்.மாணிக்கவேல் நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x