Published : 16 Sep 2024 05:59 PM
Last Updated : 16 Sep 2024 05:59 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரின் திடீர் சோதனையால் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் இணைந்து,  திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் இணைந்து, இன்று (செப்.16) திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி, ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸார் ஆகியோர் இணைந்து, போதைப்பொருள் தொடர்பாக திங்கள்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரலுக்கு வந்தடைந்த ரயில் மற்றும் ரயில் நிலையத்தின் நடைமேடை, காத்திருபோர் அறையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடமைகள், பார்சல்கள் ஆகியவற்றை மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி கூறுகையில், “வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை நடைபெற்றது.

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகள் ஒட்டிய பகுதிகளில் தமிழக காவல்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் போலீஸார் இணைந்து, அனைத்து இடங்களிலும் வழக்கம்போல சோதனை நடைபெற்று வருகிறது. இதன்மூலம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x