Published : 14 Sep 2024 06:21 PM
Last Updated : 14 Sep 2024 06:21 PM

‘ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ - ‘குரூப்-2’ தேர்வில் வினா, விடை சர்ச்சை

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த குரூப்-2 முதல் நிலைத் தேர்வின் பொது அறிவுப் பகுதியில் ஆளுநர் பதவி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி மற்றும் பதிலுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றிருந்தது கவனம் பெற்றுள்ளது.

குருப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குருப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

குருப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணிதத்திறன் தொடர்பான 100 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 100 கேள்விகளும் கேட்கப்பட்டன. பொது அறிவு பகுதி மற்றும் பொது தமிழ் பகுதியில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். பொது அறிவு பகுதியில், ஆளுநர் பதவி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி மற்றும் பதில்கள் இடம்பெற்றிருந்தது.

ஆளுநர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய வினா - பதில்: குருப்-2 முதல்நிலைத்தேர்வின் பொது அறிவு பகுதியில் ஆளுநர் பதவி தொடர்பாக சர்ச்சைக்குரிய வினா - பதில் இடம்பெற்றிருந்தது. ‘கூற்று - காரணம்’ வடிவிலான அந்தக் கேள்வியில், கூற்று பகுதியில், ‘இந்திய கூட்டாட்சியில் மாநில அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என இரு வகையான பணிகளைச் செய்கிறார்’ என்று கொடுக்கப்பட்டு, காரணம் பகுதியில், ‘ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக பின்வரும் 5 ஆப்ஷன்கள் தரப்பட்டன. அவை:

  • (A) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
  • (B) கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது
  • (C) கூற்று தவறு . காரணம் சரி
  • (D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.
  • (E) விடை தெரியவில்லை.

மேற்கண்டவற்றில் சரியான விடையை தேர்வர்கள் தேர்வுசெய்ய வேண்டும். தமிழக ஆளுநர் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆளுநர் பதவி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் கடினம்: குருப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணிதத்திறன் தொடர்பான 100 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 100 கேள்விகளும் கேட்கப்பட்டன. பொது அறிவு பகுதி மற்றும் பொது தமிழ் பகுதியில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள் பெரிதாக இடம்பெறவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர். அதேசமயம், பொது ஆங்கிலம் பகுதி வினாக்கள் எளிதாக இருந்ததாக அப்பகுதியை தேர்வு செய்தவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x