Last Updated : 12 Sep, 2024 10:09 PM

46  

Published : 12 Sep 2024 10:09 PM
Last Updated : 12 Sep 2024 10:09 PM

“அனைவரின் ஒப்புதலுடன் தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு...” - தமிழக அரசு பொறுப்புடன் பேச நிர்மலா சீதாராமன் அறிவுரை 

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார் |  படம்: ஜெ.மனோகரன் 

கோவை: “அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிராக பேசி வரும் ராகுல் காந்தியின் செயலை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என, விளக்கம் கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது கமிட்டியில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒப்புதலை பெற்ற பின்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (செப்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஏழு அம்சங்களில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம். நாட்டில் உள்ள தொழில் நகரங்களுக்கு சென்று தொழில்முனைவோரை சந்திக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். முதல்கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றேன். நேற்று முன்தினம் கோவையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவையில் ஓட்டல் தொழிலதிபர் கேட்ட கேள்விக்கு ஊடகங்கள் மூலம் பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பேசிய விதத்தை வைத்து ஜிஎஸ்டி-க்கு எதிராக செயல்படுவோர் ஆதாயம் தேடி வருகின்றனர். ஜிஎஸ்டி எளிமையாகவும் மக்களுக்கு சுமை ஏற்படாததை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஜாப் ஆர்டர் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டது ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில பிரதிநிதிகளின் ஒப்புதலை பெற்றே அமல்படுத்தப்பட்டுள்ளன.

பருத்திக்கு இறக்குமதி வரி 11 சதவீதத்தை ரத்து செய்வது, பம்ப்செட் மீதான வரி குறைப்பு தொடர்பாக தொழில்முனைவோர் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே உள்ளது. வரி விதிப்பு குறித்து அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட பின் அமல்படுத்தப்படும்.

ஜிஎஸ்டி வருவாயில் அதிக பங்களிப்பு வரி செலுத்தும் மாநிலங்களுக்கு தான் செல்கிறது. மொத்த வருவாயில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு பிரித்து கொடுக்க வேண்டும் என்பது நிதித்துறை கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. பாதிக்கப்படும் மாநிலங்கள் நிதித்துறை கமிஷனை தான் கேட்க வேண்டும். மாநில அரசு பொறுப்புடன் பேச வேண்டும். இந்திக்கு எதிராக பேசுபவர்கள் கே.வி பள்ளியில் இடம் கேட்டு எம்.பி.-க்கள் மூலம் என்னிடம் உதவி கேட்கின்றனர். மக்களை ஏமாற்றுகின்றனர்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களிடம் இருந்து விதிமுறைகளை மீறி அபராத தொகை வசூலித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணிப்பூர் குறித்து இன்று பேசுபவர்கள் கடந்த காலங்களில் மிசோரம் மாநிலத்தில் நடந்த வன்முறையின் போது இந்திய ராணுவ வீரர்களை கொண்டு மக்களை சுட்டு கொன்றது காங்கிரஸ் அரசு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . தற்போது மத்திய அமைச்சர்கள் மணிப்பூருக்கு நேரில் சென்று முகாமிட்டு கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்காக ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை மத்திய அரசு பெற்று தந்துள்ள நிலையில் அவற்றில் ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளது. தன் மீதான கேள்விகள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முற்பட்டால் அவரை எதிர்கட்சியினர் பேச விடாமல் கத்தி, வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்கட்சி தலைவராாக இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராகுல் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது குறித்து கூட்டணி கட்சியில் உள்ள திமுக-வினர் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? ராகுல் காந்தியின் செயலை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என விளக்கம் கொடுக்க வேண்டும், என்று அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x