Published : 12 Sep 2024 08:46 PM
Last Updated : 12 Sep 2024 08:46 PM

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விவரம் தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணைக்கு கடந்த மாதமே அனுமதி கிடைத்து விட்டதாக செய்திகள் வெளியானதே என கேள்வி எழுப்பிய சிறப்பு நீதிமன்றம், இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துக்கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக 3 குற்ற வழக்குகளை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி ஜெயவேல் முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசின் பொதுத்துறையிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அந்த அனுமதி கடிதம் பெற்று சமர்ப்பிக்க 3 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்,” என கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, “கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதே, இனிமேலும் அவகாசம் கோருவதை ஏற்க முடியாது. மேலும், குற்ற வழக்கின் விசாரணைக்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என இன்னும் எத்தனை முறை தான் கூறிக்கொண்டே இருப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கை வரும் செப்.18-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x