Published : 12 Sep 2024 01:07 PM
Last Updated : 12 Sep 2024 01:07 PM

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி., ஆஜர் 

வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய எம்.பி., கதிர்ஆனந்த்.

வேலூர்: 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி., கதிர்ஆனந்த் ஆஜரானார்.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கதிர் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் இருந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் புத்தம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, காட்பாடி காவல் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியகுமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வேலூர் தொகுதி எம்.பி.யாக உள்ள கதிர் ஆனந்த் இன்று (செப்-12) ஆஜரானார். அப்போது, வழக்கை வரும் அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் சத்தியகுமார் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x