Last Updated : 11 Sep, 2024 03:45 PM

 

Published : 11 Sep 2024 03:45 PM
Last Updated : 11 Sep 2024 03:45 PM

தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஃபோர்டு மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்புக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள  சிகாகோவில் ஃபோர்டு நிறுவன உயர் அலுவலர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சென்னை: அமெரிக்காவில் ஃபோர்டு மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் உள்ளது. தமிழகத்தில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்க்க துறை சார்ந்த கொள்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழகத்தில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்

இப்பயணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ. 7016 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று செப்.10-ம் தேதி சிகாகோவில் ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x