Published : 11 Sep 2024 04:10 AM
Last Updated : 11 Sep 2024 04:10 AM

திருச்சி, காஞ்சியில் ரூ.2,666 கோடி முதலீடு: சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

அமெரிக்காவின் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜாபில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உடன், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஜாபில் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் மேட் கிரவுலி, முதுநிலை இயக்குநர் நித்து சின்கா மற்றும் பி.ஜெ.ஃபேரன்காப் ஆகியோர்.

சென்னை: திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கவும், காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்துக்காகவும் ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 5.365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சீரிய திட்டங்களால், இந்திய அளவில் பல பொருளாதார குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும் அதிக முதலீடுகளை ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், 2-வது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை அடையவும், தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுஉள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 9-ம் தேதி சிகாகோவில் ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்களான ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன், ஆட்டோடெஸ்க் ஆகிய நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரம்:

ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள், தீர்வுகளை வழங்குவதில் ஜாபில் நிறுவனம் (Jabil Inc.) முன்னணியில் உள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூரில் இதன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொழில் துறை ஆட்டோமேஷன், டிஜிட்டல் மாற்றம் தொடர்பான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation) நிறுவனம். காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்துக்காக இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கட்டிடக் கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி, பொழுதுபோக்கு தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆட்டோடெஸ்க் (Autodesk). தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 5.365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிகழ்வுகளில் தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x