Published : 10 Sep 2024 04:38 PM
Last Updated : 10 Sep 2024 04:38 PM

“மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைத்ததில் தவறில்லை” - அமைச்சர் மனோ தங்கராஜ்

வேலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும், இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதால் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் கூறினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துடையாடல் நிகழ்ச்சி இன்று (செப்.10) நடைபெற்றது. இதில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். அப்போது, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் வினித், வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி மற்றும் ஆவின் நிர்வாக அதிகாரிகள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்திற்கு அழைத்து வந்துள்ளோம். ஒரு சில சங்கங்கள் மட்டும் தற்போது நஷ்டத்தில் உள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆவினில் பல ஆண்டுளாக இருந்த சுணக்க நிலை காரணமாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதில் சற்று சிரமம் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து வருகிறோம். தமிழகத்துல் கடந்த ஆண்டு பால் கொள்முதல் 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது.

அதை இந்தாண்டு 30% அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வேலூர் பால் கூட்டுறவு ஒன்றியத்தில் தற்போது பால் கொள்முதல் 1.20 லட்சம் லிட்டராக உள்ளது. அதை 2 லட்சம் லிட்டராக உயர்த்த உள்ளோம். ஆவினுக்கு தனியார் துறை அல்லது மற்ற துறையால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருகிறது. மேலும் ஆவின் பொருட்களை ஐஸ்க்ரீம், நெய் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம்" என்று அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு "இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஒரு கட்சி நிலைக்க வேண்டும் என்றால் என்ன கொள்கையை முன் வைக்கிறது என தெரிய வேண்டும். என்ன கொள்கைக்காக? என்ன காரணத்திற்காக? வருகிறார்கள் என சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் இதுவரை எந்த பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறோம் என சொல்லவில்லை. இதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். பிறகு பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று அமைச்சர் கூறினார்.

பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ள கேள்விக்கு, "இதில் எனது தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன். இதை நான் பெரிதாக சொல்லவில்லை. மது ஒழிப்பு சமூக மாற்றத்தின் மூலமாகத்தான் ஒழிக்க முடியும். கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் மட்டும் முடியாது. இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதால் அவர்களும் இந்த சிஸ்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அந்த வகையில் யாரை வேண்டுமானாலும் கூப்பிடுவதில் தவறு இல்லை. இது சமூகப் பிரச்சனை தானே தவிர அரசியல் கிடையாது" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x