Last Updated : 09 Sep, 2024 06:00 PM

1  

Published : 09 Sep 2024 06:00 PM
Last Updated : 09 Sep 2024 06:00 PM

மீட்டர் கொள்முதலுக்கான தனியார் நிறுவனங்கள் பட்டியல் - மின்வாரியம் வெளியீடு

சென்னை: மீட்டர் கொள்முதல் செய்வதற்கான தனியார் நிறுவனங்களின் பட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய மின்இணைப்புகளை பெறும் போது, மின்வாரியமே அந்த இணைப்புக்கு மீட்டரை பொருத்தி விடுகிறது. இதற்காக, விண்ணப்பதாரர்களிடம் இருந்து மின்இணைப்புக் கட்டணம் வசூலிக்கிறது. எனினும், சில சமயங்களில் மின்வாரிய அலுவலகங்களில் மீட்டர் இருந்தாலும் விண்ணப்பதாரர்களிடம் மீட்டர் இல்லை என சிலர் ஊழியர்கள் கூறி அவர்களை அலைக்கழிக்கின்றனர். இதனால், மின்இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அத்துடன், மின்வாரியத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பொதுமக்கள் புதிய மின்இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது ஒரு முனை மற்றும் மும்முனை மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற விபரம் மின்வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கேப்பிட்டல் பவர் சிஸ்டம்ஸ் (மொபைல் எண்: 87544 45464), ஹோலி மீட்டர்ஸ் இந்தியா (98153 92255, 93820 07138), எச்பிஎல் எலக்ட்ரிக் அண்ட் பவர் லிமிடெட், (98400 56522), லிங்க்வெல் டெலிசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (89396 87313), ஷினீடர் எலக்ட்ரிக் இந்திய பிரைவேட் லிமிடெட் (98402 17054), செக்யூர் மீட்டர் லிமிடெட் (97909 77033) ஆகிய தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டரை நுகர்வோர் கொள்முதல் செய்துக் கொள்ளலாம்.

மேலும், தாழ்வழுத்த பிரிவில் மீட்டர் விலை குறைந்தபட்சம் ரூ.900 முதல் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரையிலும், உயரழுத்த பிரிவில் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மீட்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து வாங்கப்படும் மீட்டர்கள் அதற்கான உத்தரவாத (கியாரண்டி) காலத்துக்குள் பழுதடைந்தால், சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலக அதிகாரி அதை கழற்றி நுகர்வோரிடம் வழங்க வேண்டும்.

அதை நுகர்வோர், தான் வாங்கிய விநியோகஸ்தரிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர் பழுதடைந்த மீட்டரை 7 நாட்களுக்குள் மாற்றி தர வேண்டும். புதிய மீட்டரை பெற்ற நுகர்வோர் அதை பிரிவு அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அந்த மீட்டரை பரிசோதித்து, சீலிட்டு வழங்குவார். அதன் பிறகு அந்த மீட்டரை நுகர்வோர் பொறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x