Published : 09 Sep 2024 03:05 PM
Last Updated : 09 Sep 2024 03:05 PM

புள்ளியியல் துறை நிலைக் குழு கலைப்பு: மத்திய அரசு மீது தமிழக காங். கடும் விமர்சனம்

சென்னை: மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புள்ளியியல் துறையின் நிலைக் குழுவைக் கலைத்தது குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு 2021-ஆம் ஆண்டு, சட்டப்படி நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் புறக்கணித்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1931-இல் தொடங்கி சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுக்குப் பிறகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த கணக்கெடுப்பை ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை மேற்பார்வையிட்டு தரவுகளின் அடிப்படையில் ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்றி வந்தது.

பிரதமர் நேரு 1950-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வாழ்வாதார அடிப்படை தேவைகளை புரிந்து கொள்வதற்காகவே புள்ளியியல் நிபுணர் மகலனோபிஸ் தலைமையில் புள்ளியியல் துறையை தொடங்கினார். இத்துறைதான் ஒன்றிய அரசு எந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, மக்களின் தேவை என்ன என்பதை அரசுக்கு தகவல் திரட்டிக் கொடுக்கிற மிகச் சிறப்பான பணியை மேற்கொண்டு வந்தது.

ஆனால், ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் 14 உறுப்பினர்கள் கொண்ட நிலைக் குழுவுக்கு பொருளாதார அறிஞரும், முன்னாள் முதன்மை புள்ளியியல் துறை அலுவலருமான பிரனாப் சென் தலைமையில் செயல்பட்டு வந்ததை மோடி அரசு திடீரென கலைத்திருக்கிறது. இதை கலைப்பதற்கு பொருந்தாத காரணங்களை கூறி அலட்சியப் போக்கோடு செயல்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் புள்ளியியல் துறையின் நிலைக் குழுவைக் கலைத்தது குறித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த டாக்டர் பிரனாப் சென் இது குறித்தும் கூறும்போது, இக்குழுவை கலைத்ததற்கான எந்தக் காரணமும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்காத ஒன்றிய அரசு தற்போது நிலைக் குழுவையே கலைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

2021-இல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாததால் ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி 10 கோடி ஏழை, எளியவர்களுக்கு பொது விநியோகத் துறையின் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-இல் நடத்தி புள்ளி விவரங்களை திரட்டாதது தான். இதுவொரு அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

2021-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் வாழ்வாதார நிலை, வறுமை சூழல் ஆகியவை குறித்த முழு விவரங்களும் வெளிவந்திருக்கும். 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டதாக கூறுகிற புள்ளி விவரம் உண்மையானதல்ல, ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் அம்பலமாகியிருக்கும். அதை மூடி மறைக்கவே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் கடந்த மூன்றாண்டுகளாக ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

அதேபோல, தேசிய புள்ளி விவர ஆணையம் நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதார நிலை குறித்த புள்ளி விவரங்களை ஆண்டுதோறும் தயாரித்து வெளியிட்டு வந்தது. அதையும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டதால் மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்டு பாஜகவினர் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையின்படி சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்பதற்கு நாட்டில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருகிற நிலையில் அதை தவிர்ப்பதற்காகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மோடி அரசு தடுத்து வருகிறது.

தலைவர் ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் செயல்பட்டு வருகிற மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் ராகுல் காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக இணைத்து நடத்த வேண்டுமென தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்'' என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x