Published : 08 Sep 2024 01:11 PM
Last Updated : 08 Sep 2024 01:11 PM

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் கடிதம் எழுதும் முதல்வரின் செயல் பயனளிக்காது: டிடிவி தினகரன்

தினகரன் | கோப்புப் படம்

சென்னை: வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மீனவர்கள் சென்ற மூன்று விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எந்த வகையிலும் பயனளிக்காது.

எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x