Published : 06 Sep 2024 04:14 PM
Last Updated : 06 Sep 2024 04:14 PM

தமிழகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை  என்ன? - ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சாலைகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கக்கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கே.வி. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்துக்கு உப்பு ஏற்றி வரும் லாரிகள் மூலமாக வெளி மாநிலங்களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகத்துக்கு ஏற்றி விடப்படுகின்றனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, உடையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் பொதுமக்களை கல்லைக் காட்டி விரட்டுவது, கோடியக்கரை வனப்பகுதியில் உள்ள மரங்களை எரிப்பது போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சாலைகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு உத்தரவிட்டும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் சாலைகளில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி. காசிநாதபாரதி ஆஜராகி, “நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அவர்களை மீட்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை அளிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சாலைகளில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பி, இதுகுறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x