Published : 05 Sep 2024 01:05 PM
Last Updated : 05 Sep 2024 01:05 PM

கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்தி சிறப்புச் சந்தை திறக்காததால் நுழைவு வாயிலிலேயே விற்பனை

சென்னை; கோயம்பேடு சந்தையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புச் சந்தை திறக்கப்படாத நிலையில், லாரிகளில் கொண்டுவரும் பூஜை பொருட்களை சந்தை நுழைவு வாயிலிலேயே வியாபாரிகள் விற்பதால், தங்கள் வியாபாரம் பாதிப்பதாக நிரந்தர வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 1,985 காய்கறி கடைகள், 992 பழக்கடைகள், 472 மலர் கடைகள், 492 மளிகைக் கடைகள் என மொத்தம் 3,941 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி நேரடியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும், 10 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரும் உள்ளனர்.

இந்த சந்தையில் பொங்கல், ஆயுதபூஜை பண்டிகை காலங்கள் போன்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் சிறப்புப் சந்தை திறக்கப்படுவது வழக்கம். அதில் அப்பண்டிகைக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களும் ஒரே இடத்தில் மலிவு விலையில் கிடைக்கும். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் கரோனா பரவலுக்கு பிறகு, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, விநாயகர் சதுர்த்தி சிறப்புச் சந்தையை திறப்பதில்லை. இந்த ஆண்டும் சிறப்பு சந்தை திறக்கப்படாத நிலையில், பண்டிகை கால வியாபாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் பலர் வெளியூர்களில் இருந்து விளாங்காய், கம்பு மற்றும் சோளக்கதிர்கள், பேரிக்காய், வாழையிலை, வாழைப்பழம், தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து, பழச்சந்தை பகுதியில், 4-வது எண் நுழைவு வாயில் பகுதியில் நுழைந்து அவர்களே நேரடி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சந்தையில் நிரந்தரமாக கடை வைத்து வியாபாரம் செய்வோரின் கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது. லாரிகளில் பொருட்களை கொண்டு வரும் வியாபாரிகள், சந்தையில் உள்ள கடைகளில் தான் பொருட்களை இறக்கிவிட்டு செல்ல வேண்டும். அவர்களே நேரடி விற்பனையில் ஈடுபடுவது விதிமீறல். இதை சந்தை நிர்வாகமும் சிசிடிவி கேமரா வழியே பார்த்துக்கொண்டு, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக நிரந்தர வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோயம்பேடு சந்தை நிர்வாகத்திடம் கேட்டபோது, “பூஜை பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வது தடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x