Published : 04 Sep 2024 05:20 AM
Last Updated : 04 Sep 2024 05:20 AM

ஆந்திராவில் தொடரும் கனமழையால் 4-வது நாளாக ரயில்களின் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை: ஆந்திராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 4-வது நாளாக நேற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, விஜயவாடா – கூடூர் தடம், காஜிபேட் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரயில் பாதைகள் மூழ்கி, சேதமடைந்துள்ளன. தென் மத்திய ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் புதுடில்லி, பனாரஸ், அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நேற்று முன்தினம் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 4-வது நாளாக நேற்றும் சேவை பாதிக்கப்பட்டது.

அந்த வகையில் 25 ரயில்கள் ரத்து செய்தும், 18 ரயில்கள் மாற்றுப்பாதையிலும் திருப்பி விடப்பட்டன. சென்னை சென்ட்ரல் - புதுடெல்லிக்கு நேற்று புறப்பட இருந்த கிரான்ட் டிரங்க் விரைவு ரயில்(12615), சென்ட்ரல் - ஹவுராவுக்கு புறப்படஇருந்த விரைவு ரயில் (12840) ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

தாம்பரம் - சந்திரகாச்சிக்கு இன்று (செப்.4) காலை 7.15 மணிக்கு புறப்பட இருந்த அந்த்யோதயா விரைவு ரயில் (22842), புதுடெல்லி - சென்னை சென்ட்ரலுக்கு இன்று புறப்பட இருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் (12622) உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாற்றுப்பாதையில் இயக்கம்: சென்னை சென்ட்ரல் - ஜெய்பூருக்கு நேற்று புறப்பட்ட அதிவிரைவு ரயில் (12967), ரேணிகுண்டா, குண்டக்கல் வழியாக திருப்பி விடப்பட்டது. சென்னை சென்ட்ரல் - மாதா வைஷ்ணோ தேவி காத்ராவுக்கு நேற்று புறப்பட்ட விரைவு ரயில் (16031) விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக திருப்பி விடப்பட்டது.

அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்ட விரைவு ரயில்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 18 ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x