Published : 02 Sep 2024 05:14 AM
Last Updated : 02 Sep 2024 05:14 AM

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் வரை போராட்டம் தொடரும்: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் தகவல்

கோப்புப் படம்

சென்னை: அரசு ஊழியர்களின் முதுமைக்கால பாதுகாப்புக்கு பழைய ஓய்வூதிய திட்டமே உறுதுணையாக இருக்கும் என்பதால், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வரை அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும் என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இதை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு மறுவடிவமே ஆகும். மேலும் இந்த நியாயமற்ற ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசின் சாதனையாகக் கருதப்படுகிறது

மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்படும். ஊழியர் பணிஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம்ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், இதற்கு குறைந்தபட்சம் 25ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஊழியர் தானாக முன்வந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கு ஓய்வூதியம், அவர் எப்போது 60 வயதைபூர்த்தி செய்கிறாரோ அந்த தேதியில் இருந்து தான் கிடைக்கும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டுகள் சேவை புரிந்தாலே அவருடைய கடைசி மாத அடிப்படை ஊதியத்தில் 50சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) உண்டு. ஆனால், புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி இல்லை. அத்துடன், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான சலுகைகள் உள்ளன.

அரசு ஊழியர்களின் முதுமைக்கால பாதுகாப்புக்கும், அவருடையமறைவுக்குப் பின் அவர்களுடைய குடும்பத்துக்கும் பழைய ஓய்வூதிய திட்டமே உறுதுணையாக இருக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தும் வரை அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x