Published : 01 Sep 2024 06:01 PM
Last Updated : 01 Sep 2024 06:01 PM

“ராகுலும், விஜய்யும் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்” - செல்வப்பெருந்தகை

உதகை: “10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும், ராகுல் காந்தியும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் மேற்குவங்கத்துக்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள ஒய்.பி.ஏ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் இந்தக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பல உள்ளன. குறிப்பாக பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.35 ஆகவும், படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, கூடலூர் பகுதியில் இருந்து வரும் செக்சன் 17 பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு போன்றவை இருந்து வருகிறன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்சன் 17 குறித்து எம்எல்ஏ குழுக்கள் ஆய்வு செய்து தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி அழுத்தம் தந்து வருகிறோம்.

நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் சாலைகள் தரத்துடன் போடப்பட வேண்டும். உறுதி திட்டத்தை தீட்டி கேரளா மாநிலங்களில் ரப்பர் பயன்படுத்தி போடப்பட்டிருக்கும் சாலைகளை போல், மலை மாவட்டங்களிலும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு இதைக் கோரிக்கையாக வைக்கிறோம்.

அதேபோல் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த மிகப்பெரிய பேரிடர் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அந்தப் பகுதியை பார்வையிட்ட போது கூட இன்னும் எத்தனையோ பேர் மண்ணிலிருந்து மீட்கப்படவில்லை. அந்தநிலை தமிழ்நாட்டில் ஒருபோதும் மலைவாழ் பகுதிகளில் ஏற்படக் கூடாது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யும், ராகுல் காந்தி சந்தித்தனர். ஆனால் என்ன பேசினார்கள் என்பது தெரியாது. அது அவர்களை கேட்டால் தான் தெரியும். அவருக்கு என்ன அறிவுரைகள் சொன்னார் என விஜய்யைத் தான் கேட்க வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக சென்றுள்ளார். முதல்வர் அந்நிய முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வர அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இங்குதான் தொழில் செய்வதற்கு உகந்த இடம். ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதற்காக முதல்வர் முயற்சித்து வருகிறார். அவர் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சியில் 2013-ம் ஆண்டு நிர்பையா சம்பவத்தை பெரிதுப்படுத்தினர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்கள். பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றும் போதெல்லாம் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். அதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை. எங்கு பார்த்தாலும் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை சரியான முறையில் செலவழிக்கவில்லை என்று பல அறிக்கைகள் சொல்கின்றன. மணிப்பூருக்கு திறக்காத வாய் மேற்குவங்கத்துக்கு திறக்கிறது. மணிபூரில் பாஜக ஆட்சி. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி.

அதேபோல் இருமொழிக் கொள்கை என்பது தமிழகத்தினுடைய பாலிசி. அந்த இரு மொழிக் கொள்கையை மாற்ற வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். பிஎம் ஸ்ரீ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அது இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய நாட்டில் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம். ஆனால் மத்திய அரசு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை திறக்கலாம் என்று கூறுகிறது. அப்படி என்றால் நமது பேராசிரியர்கள் ஆசிரியர்களும், குறைந்தவர்கள் அல்ல அனைவருமே வல்லவர்கள் தான். நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் தான். ஆகையால் இதில் முரண்பாடு உள்ளது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரானது. எனவே, மத்திய அரசு இப்படிப்பட்ட கெடுபிடியை பிடிக்கக் கூடாது. எனவே உடனடியாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை அவர்கள் கொடுக்க வேண்டும்.

அதிமுக ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை வெளிநாடு சென்றதால் தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்கிறார். கொஞ்ச நாட்களாகவே அவர்கள் இருவரின் மத்தியில் என்ன பகை என்பது தெரியாது கொள்கை ரீதியான பகையா? வேறு ஏதாவது பகையா? ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர் அண்ணாமலை வெளிநாடு சென்று வரட்டும் அதன் பின்பு பார்க்கலாம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. இண்டியாகூட்டணி தேசத்திற்கு வழிகாட்டும் கூட்டணியாக உள்ளது. திமுக உடன் உள்ள கூட்டணி கட்சிகள் வேறு கட்சிக்கு செல்வதாக கூறப்படுவது வதந்தி. அப்படி யாரும் செல்ல மாட்டார்கள். 2026-ம் ஆண்டு இந்த இந்தியா கூட்டணி தொடரும் வெற்றியை பெரும் ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, உதகை எம்.எல்.ஏ. ஆர்.கணேஷ், வேலுசாமி, மாநில செயலாளர் டி.நாகராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x