Last Updated : 31 Aug, 2024 07:46 PM

 

Published : 31 Aug 2024 07:46 PM
Last Updated : 31 Aug 2024 07:46 PM

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிப்பு: அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் படகில் சென்று இன்று (சனிக்கிழமை) ஆய்வு செய்தார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகவில் உள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, அணை நீர்மட்டம் முழு கொள்ளவை 2 முறை எட்டியது. அணைக்கான நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 27-ம் தேதி 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து கடந்த 19-ம் தேதி, டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது. அதேபோல், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு கடந்த 24-ம் தேதி நீர் திறப்பு 500 கன அடியில் இருந்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 12,000 கன அடியில் இருந்து 13,500 கன அடியாக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நேற்று விநாடிக்கு 5,349 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.02 அடியில் இருந்து 115.56 அடியாகவும், நீர் இருப்பு 87.26 டிஎம்சியில் இருந்து 86.56 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது. அணையில் படகில் சென்று ஆய்வு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து நீர் திறப்பு 22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று மாலை (சனிக்கிழமை) அணையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் வெள்ள நீர் போக்கி, வெள்ள கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி, அணை தடுப்பு சுவர், உள்ளிட்ட பகுதிகிளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், படகு மூலமாக திப்பம்பட்டியில் உள்ள உபரிநீர் நீரேற்று நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், அணையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, மேல் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், கால்வாய் பிரிவு உதவி செயற்பொறியாளர் மதுசூதனன், சரபங்கா வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ஆனந்தன், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x