Published : 31 Aug 2024 04:45 AM
Last Updated : 31 Aug 2024 04:45 AM

கள்ளச்சாராய வழக்கில் விசாரணை முடிந்துள்ளதால் சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் 50 பேர் கொண்ட 16 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி 24 பேரை கைது செய்துள்ளனர். அதில், 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 244 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலன் விசாரணை முடிந்து, விரைவில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்குமாற்றுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இந்த சம்பவத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கு போலீஸார் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் மனுதாரர்கள் தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்பட வில்லை.

உள்ளூர் போலீஸாரின் விசாரணை தவறாக இருந்தால் மறுவிசாரணை கோரலாம். இந்த வழக்கை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தொடரவில்லை. எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை’’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது என சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பிசுட்டிக்காட்டியபோது அதை போலீஸார் மறுத்தார்களா? என தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்’’ என அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x