Last Updated : 29 Aug, 2024 11:19 AM

 

Published : 29 Aug 2024 11:19 AM
Last Updated : 29 Aug 2024 11:19 AM

மதுரை | கட்சி பெயரை சொல்லி மோசடி - திமுக எம்எல்ஏ வீட்டு வாசலில் தொழிற்சங்க நிர்வாகி தீக்குளிப்பு

மதுரை: மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டு வாசலில் ஆவின் தொழிற்சங்க நிர்வாகி இன்று காலை தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருப்பவர் தளபதி. இவரது வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ளது. இன்று காலை வழக்கம்போல் நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு எம்எல்ஏ-வான தளபதி வீடு திரும்பினார்.

அப்போது காலை 8 மணி அளவில் மானகிரி பகுதியைச் சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க நிர்வாகி கணேசன் என்பவர் எம்எல்ஏ-வான தளபதியின் வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவர் எம்எல்ஏ வீட்டு வாசலில் நின்றபடி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவரது கை, கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக அவர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருப்பரங்குன்றம் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கட்சியின் பெயரைச் சொல்லி நிர்வாகிகள் சிலர் ரூ. 3 கோடி வரை நிதி வசூலித்து மோசடி செய்துள்ளனர். இது பற்றி புகார் அளித்தும் முறையான விசாரணை நடவடிக்கை இல்லை என்பதால், தானும் கலைஞருடன் சேரப் போகிறேன் எனக் கூறி அவர் தீக்குளித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x