Last Updated : 27 Aug, 2024 04:12 PM

2  

Published : 27 Aug 2024 04:12 PM
Last Updated : 27 Aug 2024 04:12 PM

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை: ஆக.31-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 

சென்னை: சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு முதல் முறையாக ஜூன் 20-ம் தேதி வருகை தர திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவந்தனர்.

இதற்கிடையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னை வருகை பற்றி அவ்வப்போது தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், மோடி வருகை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சென்னை - நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக வரும் 31-ம் தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து தெற்கு ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'சென்னை - நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை, பெங்களூரு - மதுரை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னைக்கு பிரதமர் மோடி வருவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேநேரத்தில், சென்னை சென்ட்ரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது தொடர்பான விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x