Published : 27 Aug 2024 04:33 AM
Last Updated : 27 Aug 2024 04:33 AM

கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் உட்பட ரூ.115 கோடி பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் தொடக்க விழா, ரூ.115 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.5.22 கோடியில் 4 முடிவுற்ற பணிகள் திறப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், பொன்முடி, பி.கே .சேகர்பாபு, கே .என்.நேரு, தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் மேயர் ஆர்.பிரியா ஆகியோர் பங்கேற்றனர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.5.22 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் இல்லாத நிலைஉள்ளது. இதையடுத்து, 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' உருவாக்கப்பட்டு ரூ.1,000கோடியில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக கடந்த மார்ச்14-ம் தேதி வடசென்னை பகுதிக்குவிரிவான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் வடசென்னைவளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில் 3.93 ஏக்கர் பரப்பில் ரூ.53.50 கோடியில் ஒரு லட்சத்து 25,402 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் உட்பட 3 தளங்களில் 188 கடைகளும், வாகனங்கள் நிறுத்துமிடமும், உணவு விடுதி, மீன்வள அமைப்புகளும் கட்டப்படவுள்ளன. இதற்காக கொளத்தூரில் சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் வர்த்தக மையம்அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து மூலகொத்தலத்தில் ரூ.14.31 கோடியில் 41,593 சதுரஅடி கட்டிட பரப்பளவில் அடித்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடியசமுதாய நலக்கூடம் கட்டப்படவுள்ளது. இதற்கும் புரசைவாக்கம் கான்ரான்ஸ்மித் சாலையில் ரூ. 11.43 கோடி மதிப்பில் 45,198 சதுர அடி பரப்பில் நவீனசலவைக்கூடம் கட்டவும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்த சலவைக் கூடமானது தரைதளத்தில் சலவைக் கூடங்கள், இயந்திரக் கூடங்கள், துவைக்கும் கூடங்கள், உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி தேய்க்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவையும் முதல்தளத்தில் துணி உலர்த்தும் இடம்உட்பட 60 அறைகள் கொண்ட நவீன சலவைக்கூடமாக அமையவுள்ளது.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் மீன்கள் சூழ அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயில்.

நுழைவாயில் அரங்கம்: இதுதவிர புழல் ஏரிக்கரையில் 8.17 ஏக்கரில் ரூ.16.96 கோடியிலும் ரெட்டேரிக் கரையில் 4.38 ஏக்கர் பரப்பில் ரூ.13.12 கோடியிலும் நுழைவாயில் அரங்கம், இணைப்பு பாலங்கள், பூங்கா, நடைபாதை, சூரிய மின்கலம் கொண்ட நிழல் இருக்கைகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் நவீனகழிப்பறை போன்ற அனைத்துவசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.

அதேபோல், கொளத்தூர் ஏரிக்கரையில் ரூ.6.26 கோடியில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது.

இந்த பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.115.58 கோடியாகும். இதுதவிர, கொளத்தூர் நேர்மை நகரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம் சி.கே.சாலையில் ரூ. 2.27 கோடியில் நவீன சலவைக் கூடம் மற்றும் ரூ.45 லட்சம் செலவில் 3 நியாயவிலைக் கடைகள் என ரூ.5.22கோடியில் முடிவுற்ற பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன். சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x