Published : 27 Aug 2024 06:10 AM
Last Updated : 27 Aug 2024 06:10 AM

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பழைய திட்டத்துக்கு இணையானது அல்ல: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் விமர்சனம்

சென்னை: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர் டி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாங்கள் எதிர்பார்த்தபடி சோமநாதன் குழு பரிந்துரையை மத்திய அரசு அறிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை, ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரில் அமல்படுத்தியுள்ளது.

10 சதவீதம் பங்களிப்புத் தொகையை ஊழியர்களிடம் இருந்து அபகரிக்கும் அதே புதிய ஓய்வூதியத் திட்டமே தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே தொடருவதா அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதா என்பதை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது மறைமுகமான பல சிக்கல்களையும், தெளிவின்மையையும் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) வசதி இல்லை.

ஊழியர்கள் தங்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்து வைத்துள்ள 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் தொகை அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுமா அல்லது அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் முடித்த பணி சேவை ஆண்டை கணக்கில் கொண்டு முடிவுற்ற ஒவ்வொரு 6 மாதத்தின் ஊதியம் பத்தில் ஒரு பங்காக அளிக்க உள்ள தொகையாக மடைமாற்றம் செய்யப்படுமா? என்பன போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

எனவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களின் கோரிக்கையும் அல்ல. அது பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதும் அல்ல. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடைய தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x