Published : 25 Aug 2024 03:21 PM
Last Updated : 25 Aug 2024 03:21 PM

‘நம்ம‌ மெரினா  நம்ம பெருமை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெற்ற "நம்ம‌ மெரினா நம்ம பெருமை" விழிப்புணர்வு இயக்கத்தினை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (25.08.2024) மெரினா கடற்கரையில் நடைபெற்ற "நம்ம‌ மெரினா நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு இயக்கத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான அதி நவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் ரோபோடிக் இயந்திரங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்களின் செயல்பாடுகளை இயக்கி வைத்து, 411 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் "நம்ம‌ மெரினா நம்ம பெருமை" விழிப்புணர்வு இயக்கத்தில் கடற்கரையை தூய்மையாக பராமரிக்க புதிதாக வைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைகளை போடும் வகையிலான பல்வடிவ குப்பைத் தொட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கடற்கரையினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 குழந்தை தூதுவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்திற்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் மற்றும் தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட அடையாறு மண்டலத்தில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களாலும், அங்குள்ள சிறு சிறு கடைகளாலும் மணற்பரப்பு பகுதியானது அசுத்தம் ஆகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும், கடற்கரைப் பகுதியில் உள்ள சிறு சிறு கடைகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்துவதும் அவசியமாகிறது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மிக நீண்ட மெரினா கடற்கரையினையும், பெசன்ட் நகர் கடற்கரையினையும் அழகுடனும், பொலிவுடனும் கண்காணிக்க ஏதுவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும், அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய நான்கு சக்கர அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள் (All Terrian Vehicle-ATV) தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 ரோந்து வாகனங்களை அமைச்சர் உதயநிதி இன்று பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) போன்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனடிப்படையில் அமைச்சர் கே.ஏன்.நேரு அறிவிப்பின்படி, தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், தலா ரூ.6,48,86,888/- வீதம் ரூ.12,97,73,776/- மதிப்பில் 2 எண்ணிக்கையிலான ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multipurpose Excavator) இயந்திரங்கள் மற்றும் 5 வருட இயக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பிற்கு ரூ.9,82,34,076/- என மொத்தம் ரூ.22.80 கோடி மதிப்பில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள லிச்டென்ஸ்டைன் நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அமைச்சர் உதயநிதி பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 எண்ணிக்கையிலான மணற்பரப்பை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் 2019 ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த இயந்திரங்களின் தொடர் பயன்பாடு மற்றும் தேய்மானத்தின் காரணமாக அதன் திறன் பயன்பாடு குறைந்துள்ளது. இந்த இயந்திரங்களின் முழு திறனைபெறுவதற்கு ஏதுவாக, முதற்கட்டமாக 2 இயந்திரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதனால் கடற்கரை மணற்பரப்பினை சுத்தம் செய்யும் பணிகள் திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அப்பணியாளர்களின் வாரிசுதாரர்களான 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு அமைச்சர் உதயநிதி கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் சந்திர பானு ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x