Published : 23 Aug 2024 10:53 PM
Last Updated : 23 Aug 2024 10:53 PM

புதை சாக்கடை பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு @ திருச்சி

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருச்சி மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் புத்துக்கோவில் தெருவில் புதை சாக்கடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜித்தன் சர்க்கார் மகன் ராஜ்குமார் (22) கடந்த 3 மாதமாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜ்குமார் புத்துக்கோவில் தெருவில் புதை சாக்கடைக்காக துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். மின்சாரத்தில் இயங்கும் டிரில்லர் கொண்டு சாலையை துளையிடும் போது உடலில் மின்சாரம் பாய்ந்து ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x