Published : 23 Aug 2024 05:36 PM
Last Updated : 23 Aug 2024 05:36 PM

போக்குவரத்து ஊழியர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுக்கு தமிழக அரசு அழைப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ஆக.24-ம் தேதி 14-வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதனால் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன.

இது தொடர்பான தொழிலாளர் துறையின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஆக.27-ம் தேதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டுநர் சார்பில் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையானது, ஆக.27-ம் தேதி காலை 11 மணிக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் சார்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x