Published : 22 Aug 2024 03:37 PM
Last Updated : 22 Aug 2024 03:37 PM

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை இலவசமாக வழங்கக் கோரி சென்னையில் பொதுமக்கள் மறியல்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை இலவசமாக வழங்க கோரி சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சென்னை: நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை இலவசமாக வழங்க கோரி, சென்னை - கண்ணப்பர் திடல் பகுதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள ராஜா முத்தையா சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 68 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடும்பங்கள் கடந்த 2002-ம் ஆண்டு அகற்றப்பட்டு, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூளை, கண்ணப்பர் திடல் அருகில் உள்ள மாநகராட்சியின் வீடற்றோர் காப்பகத்தில் (கைவிடப்பட்ட கட்டிடம்) தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டனர். அப்போதே, அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் ஜட்காபுரம் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக அக்குடும்பங்கள் 108 குடும்பங்களாகப் பெருகிவிட்டன. இதனால் இட நெருக்கடி ஏற்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கடந்து 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் அவர்களுக்குச் சென்னை மாநகருக்கு உள்ளேயே வீடுகள் பெற்றுத்தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 108 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவும் செய்யப்பட்டு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறி பயனாளிகளை இன்று காலை கண்ணப்பர் திடல் பகுதிக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் வரவழைத்துள்ளனர். வீடு ஒதுக்கீடு பெற ரூ.4.75 லட்சம் செலுத்த வேண்டும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.செல்வா ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய நிலையில், அவரை விடுவிக்குமாறு பொதுமக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பாக்கம் காவல் சரக துணைய ஆணையர் ரகுபதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செல்வாவை போலீசார் விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பயனாளி செல்வம் கூறும்போது, “எங்களுக்கு மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் வீடுகள் ஒதுக்க இருப்பதாகவும், வீடு ஒதுக்கீடு பெற ரூ.4.75 லட்சம் செலுத்துமாறு வாரியம் கூறியுள்ளது. இதில் ரூ.1.50 லட்சம் உடனே செலுத்த வேண்டும். மீதத் தொகையை வங்கி கடனாக பெற்றுக் கொள்ளலாம். அதை பத்தாண்டுகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரத்து 500 வீதம் தவணை முறையில் செலுத்தலாம் என்று தெரிவித்தனர். இதன்பிறகு மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம் என ஏகப்பட்ட செலவுகள் உள்ளன. எங்களால் அவ்வளவு தொகையை செலுத்த முடியாது. எனவே எங்களுக்கு இலவசமாக வீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x