Published : 22 Aug 2024 07:57 AM
Last Updated : 22 Aug 2024 07:57 AM

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நேற்று நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம்.

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1914-ல் கட்டப்பட்ட ரயில் பாலம் நூறாண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தூக்கு பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பழைய பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் 2018-ல் அறிவித்தது. முதல்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

2019 மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். 2021 செப்டம்பருக்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க ரயில்வே நிர்வாகம் இலக்குநிர்ணயித்தது.

பாம்பன் கடல் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் சீற்றம், புயல்உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும்கரோனா பரவலால் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பாலப் பணிகளை முடிக்க முடியவில்லை. இதனால் பாலத்துக்கான திட்ட செலவு ரூ.535 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

புதிய ரயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பழையரயில் பாலத்தைவிட சுமார் ஒன்றரை மீட்டர் உயரம் அதிகமாகும். பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்களுடன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டை வழித்தடத்துடன், மின்சார ரயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவை நிறுத்தம்: முன்னதாக, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமானப் பணிகளுக்காக 2023 டிச. 23 முதல் ராமேசுவரத்துக்கு ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும்ரயில்கள் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை இயக்கப்படுகின்றன. இதனால் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இல்லை.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில்தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் செங்குத்துத் தூக்குப்பாலத்தைப் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கிச் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இரண்டு என்ஜின்களைக் கொண்ட ரயிலில் ஜல்லிக் கற்கள் நிரப்பப்பட்ட 11 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முதலில் 30 கி.மீ. வேகத்தில் சரக்கு ரயில்இயக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக 45 கி.மீ, 60 கி.மீ என வேகத்தை அதிகரித்து, சோதனைஓட்டம் நடைபெற்றது. இந்தசோதனைக்காக புதிய ரயில்பாலத்தின் தூண்கள், தண்டவாளங்களில் உணர்திறன் கருவிகள் பொருத்தப்பட்டு, பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

சோதனை ஓட்டத்தின்போது ரயில்வே விகாஸ் நிகாம் நிறுவனம் மற்றும் கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள், ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.

புதிய பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்துத் தூக்குப் பாலத்தை உயர்த்தி, இறக்கும் சோதனை இந்த மாத இறுதியில் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும்,பாம்பன் புதிய ரயில் பாலத்தில்அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் மாதம் மீண்டும் மண்டபத்திலிருந்து ராமேசுவரத்துக்கு ரயில் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, ஜனவரி முதல் ராமேசுவரம் வரையிலும் மின்சார ரயில்களை இயக்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x