Last Updated : 21 Aug, 2024 06:57 PM

2  

Published : 21 Aug 2024 06:57 PM
Last Updated : 21 Aug 2024 06:57 PM

“2026-ல் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டாட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்” - அண்ணாமலை

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கருத்தரங்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்

காஞ்சிபுரம்: “வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டாட்சியை உருவாக்குவோம்,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கருத்தரங்கம் இன்று (ஆக.21) நடைபெற்றது. இதில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓரிக்கை சென்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியது: “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். அவரது பேச்சில் அரசியல் பெருந்தன்மை இல்லை. அதெற்கெல்லாம் மதிப்பளித்து பதில் சொன்னால் அது தவறானதாகிவிடும். மக்களுக்கு பாஜக பற்றி தெரியும். நாங்கள் எதற்காக உழைக்கிறோம் என்பதும் தெரியும். எப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்க பாஜக தொண்டர்கள் உழைக்கிறார்கள் என்பதும் தெரியும்.

அதிமுகவால்தான் பாஜகவுக்கு 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்ததாக கூறுகிறார். கடந்த 2024 தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதத்தை பார்க்கவும். எத்தனை இடங்களில் டெபாசிட் போயுள்ளது, எத்தனை இடங்களில் 3-ம் இடம், 4-ம் இடம் வந்துள்ளனர் என்பதை பார்க்கவும். கூட்டணி என்று வந்த பிறகு பாஜக வெற்றி பெறுவதற்கு அதிமுகவினர் உழைத்திருப்பார்கள். அதேபோல் அதிமுகவினர் வெற்றி பெறுவதற்கு பாஜகவினர் உழைத்துள்ளனர். பாஜக இல்லை என்றால் அதிமுகவுக்கு இவ்வளவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்திருப்பார்கள். தற்போதைய அதிமுகவின் நிலையை பார்த்து அவர்கள் பரிதாபப்பட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அனைத்து இடங்களிலும் ஊழல் எட்டிப் பார்க்கிறது. திராவிடக் கட்சிகள் இல்லாமல் பாஜக வரும்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். அதற்கான முத்தாய்ப்பான கூட்டணியை 2024-ம் ஆண்டு உருவாக்கினோம். வரும் 2026-ல் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்,” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண் மருத்துவர் கொடுமையாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை எதிர்த்து போராடும் மருத்துவர்களை கொச்சைப்படுத்துகின்றனர். இந்த பெண் மருத்துவர் கொலையில் ராகுல் காந்தி ஏன் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை? நடிகர் விஜய் முதலில் கட்சி கொடியை ஏற்றிய பிறகு அதுகுறித்து நான் பதில் அளிக்கிறேன்,” என்றார்.

இந்த பயிலரங்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பு, 2026-ல் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x