Published : 18 Aug 2024 06:43 PM
Last Updated : 18 Aug 2024 06:43 PM

“தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம்” - மமக தலைவர் ஜவாஹிருல்லா

திருச்சி: தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிகழாண்டு டிசம்பர் இறுதிக்குள் மமக சார்பில் 100 இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடத்தி, 10 லட்சம் இளைஞரகளை சந்தித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிவிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்து உள்ளது. வகுப்புவாத சிவில் சட்டங்களை எதிர்ப்பதாக மோடி கூறுகிறார். மத சார்பற்ற சிவில் சட்டங்களை கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 9.4 லட்சம் ஏக்கர் வக்பு நிலங்களை அபகரிக்க வக்பு திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்நிலையில் இண்டியா கூட்டணி கண்டனம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி ஆட்சேபனை காரணமாக வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

பிரதமரின் சுதந்திர தின உரை அரசியல் கட்சி தலைவரின் உரை போலவும், மத தனியார் சட்டங்களை இலக்கு வைத்து அவர் ஆற்றிய உரையாகவும் உள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் 25-ன் படி இந்திய குடிமக்களுக்கு எந்த மதத்தையும் பின்பற்றவும், கடைபிடிக்கவும், பிறருக்கு எடுத்துரைக்கவும் உரிமை உள்ளது. அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மோடி உரை உள்ளது. இதனை இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்க்க வேண்டும். எதிர்க்க வேண்டும் என நாங்கள் இண்டியா கூட்டணியை வலியுறுத்துவோம்.

50 ஆண்டு காலம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரும் தலைவராக, சமூக நீதியை நிலை நாட்டிய தலைவராக, விளிம்பு நிலை மக்களை தூக்கி விட்ட தலைவரான கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் முதல்வர் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு வெளியிட சம்மதித்து இருபது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். பத்தாண்டுகள் அதிமுக அரசின் செயல்பாட்டை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறைவு. அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சீர்குழைவுதான் தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த உட்சபட்ச சீர்குலைவு என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கன 3.5 இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு மாநில அரசும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழி பிறந்து உள்ளது. எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

திருமாவளவன் எந்த சூழ்நிலையில் தலித் ஒருவர் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது என கருத்து சொன்னார் என்பதை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் அவர் பேசிய ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பரப்புரை செய்வது தவறு. தமிழ் நாட்டில் தலித் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் முதல்வர் ஆவதை வரவேற்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x