Published : 18 Aug 2024 02:21 PM
Last Updated : 18 Aug 2024 02:21 PM

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.18) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 20, 21 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், 22 முதல் 24ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 20ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 நிலவரபடி, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்: அதிகபட்சமாக பெரம்பலூரில் 9 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 8 செ.மீ, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, மதுரை மேட்டுப்பட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு, சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தருமபுரி மாவட்டம் ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சாத்தியார் , பெரம்பலூர் மாவட்டம் புது வேட்டக்குடி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று முதல் 22ம் தேதி வரை சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x