Published : 16 Aug 2024 05:16 PM
Last Updated : 16 Aug 2024 05:16 PM

“நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்” - சீமான் கண்டனம்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: “நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியதும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதும் மாநில அரசுகளின் தலையாயக் கடமை என்பதை உணர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் இயங்குவதை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே தெலங்கானாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள்ளேயே பெண் மருத்துவர் படுகொலை செய்யப்படும் அளவுக்கு மருத்துவர்களுக்கு நாடு முழுவதும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.

பாலியல் படுகொலை செய்யப்பட்ட மேற்கு வங்கப் பெண் மருத்துவரின் உடற்கூராய்வில் அவரது தலை முதல் கால் வரை பல இடங்களில் படுகாயங்கள் இருப்பதும், பற்களால் கடித்து இருப்பதும், கால்கள் செங்குத்தாக உடைக்கப்பட்டு இருக்கின்றன எனவும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் மட்டுமே இக்கொடூரங்களை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெளியாகும் நெஞ்சைப் பதற வைக்கும் செய்திகள் யாவும் மிகுந்த அச்சத்தையும், மனவலியையும் கொடுக்கிறது.

இந்திய ஒன்றியமே வெட்கி தலைகுனிய வேண்டிய இப்பெருங்கொடுமைக்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்களும், மாணவர்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திவருவதை அடுத்து, இவ்வழக்கு விசாரணை மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசும் முழு ஒத்துழைப்பு நல்கி உண்மையான குற்றவாளிகளையும், தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனைக் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியதும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதும் மாநில அரசுகளின் தலையாயக் கடமை என்பதை உணர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் இயங்குவதை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x