Published : 15 Aug 2024 05:45 AM
Last Updated : 15 Aug 2024 05:45 AM

செந்தில் பாலாஜி மேல்முறையீடு: ஒருவாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடிவழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜிஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யமேலும் ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரினார்.

அதையேற்ற நீதிபதிகள், ஒருவாரத்துக்குள் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும், மீண்டும் அவகாசம் கோரக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வரும் ஆக. 21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x