Last Updated : 14 Aug, 2024 05:38 PM

 

Published : 14 Aug 2024 05:38 PM
Last Updated : 14 Aug 2024 05:38 PM

ஜூன் 1 முதல் ஆக.12 வரை மேட்டூர் அணைக்கு 157 டிஎம்சி நீர்வரத்து: அதிகாரிகள் தகவல் 

மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ள நிலையில், அணையில் தேங்கியுள்ள நீர் கடல்போல் காட்சியளிக்கிறது.

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு கடந்த ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 157 டிஎம்சி நீர் வந்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை ஜூலை 30-ல் எட்டியது. தொடர்ந்து 2-வது முறையாக கடந்த 12-ம் தேதியும் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை மற்றும் உபரிநீர் போக்கி வழியாக கடந்த 12-ம் தேதியன்று 26,000 கன அடியும், நேற்று 35,500 கன அடியும் திறக்கப்பட்டது.

இந்நிலையில், அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவில் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, நீர் வெளியேற்றம் நேற்று மாலை விநாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் நீர் வெளியேற்றம் 24,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதில், உபரிநீர் போக்கி வழியாக 2,500 கன அடியும், சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு இன்று காலையில், நீர்வரத்து விநாடிக்கு 26,864 கன அடியாகவும், நீர்மட்டம் 120.05 அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 93.55 டிஎம்சி-யாக உள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு கடந்த ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 157 டிஎம்சி நீர் வந்துள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய நீர்வளத்துறை அதிகாரிகள், ''கர்நாடகவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பின. இதன் காரணமாக, அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. அதன்படி, கடந்த ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 157 டிஎம்சி நீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 99 டிஎம்சி நீரும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 58 டிஎம்சி நீரும் வந்துள்ளது. அதேபோல், அணையில் இருந்து 80 டிஎம்சி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் பாசனத்துக்காக 25 டிஎம்சி-யும், 16 கண் மதகுகள் வழியாக 48 டிஎம்சி-யும், குடிநீர் தேவைக்காக 6.50 டிஎம்சி-யும் வெளியேற்றப்பட்டுள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x