Published : 14 Aug 2024 02:47 PM
Last Updated : 14 Aug 2024 02:47 PM

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்

மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பாம்பனில் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள்.

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். அவர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் தொடர்கிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாம்பனில் இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் ஆழமற்ற கடற்பகுதிகளில் நங்கூரமிடப்பட்ட்டுள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 20-ம் தேதி பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x