Last Updated : 13 Aug, 2024 05:56 PM

 

Published : 13 Aug 2024 05:56 PM
Last Updated : 13 Aug 2024 05:56 PM

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு 

மதுரை: இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூலை 31-ம் தேதி ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான படக்கில் மூக்கையா, முத்து முனியன், மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அன்று இலங்கை கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.

இதனால் கோபத்தில் இருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கியதில் மலைச்சாமி உயிரிழந்தார். ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற இருவரும் கைது செய்யப்பட்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 2011-ம் ஆண்டிலும் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. அப்போதும் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகை பறிமுதல் செய்ததோடு, விக்டஸ், மாரிமுத்து, ஜான்பால், அந்தோணி ராஜ் உள்ளிட்ட மீனவர்களை சித்ரவதை செய்து கொன்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்றாலும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. இலங்கை கடற்படையால் கடந்த 1974 முதல் 500-க்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை இலங்கை கடற்படையினர் மீது ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யவில்லை. முறையான விசாரணையும் நடத்தப்படவில்லை.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும், இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி இன்று விசாரித்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x