Last Updated : 13 Aug, 2024 04:52 PM

15  

Published : 13 Aug 2024 04:52 PM
Last Updated : 13 Aug 2024 04:52 PM

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் அதிரடி கைது - பின்னணி என்ன?

தேவநாதன் யாதவ் | கோப்புப்படம்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் இன்று (ஆக.13) கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகளவில் வட்டி அளிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.

மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஒரே நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் திரண்டு தங்களின் பணத்தைக் கேட்டு வந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்ததாக அந்த நிதி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x