Last Updated : 13 Aug, 2024 04:48 PM

 

Published : 13 Aug 2024 04:48 PM
Last Updated : 13 Aug 2024 04:48 PM

குமரிமுனை ஜீரோ பாய்ன்ட் பகுதி 147 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட 147 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி-யான விஜயகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, கடந்த 2022-ல் எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோ பாய்ன்ட் பகுதியில் 147 அடி உயரத்தில் தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. அந்தக் கம்பத்தில் தற்போது தேசியக் கோடி பறக்கவிடுவதில்லை.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 148 அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இரண்டாவது உயரமான கொடி கம்பம் முறையாக பராமரிக்கப்படாததால் கொடி பறக்காமல் வெறுமனே உள்ளது. கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட்டில் உள்ள 147 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிட உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.ஆண்டோ பிரின்ஸ் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “147 அடி உயர கொடி கம்பத்தில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “இந்த தேசியக் கொடி கம்பம், கொடியை பராமரிக்க வங்கியில் வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனவே, 147 அடி உயர கொடி கம்பத்தில் கொடி தொடர்ந்து பறக்கும் வகையில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x