Published : 12 Aug 2024 07:57 PM
Last Updated : 12 Aug 2024 07:57 PM

“ராமரின் வாழ்க்கையை மக்கள் மனதில் பதிய வைத்ததில் கம்பர் முன்னோடி!” - ஆளுநர் ஆர்.என்.ரவி

ராமேசுவரத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் 'கம்பனில் இலக்கிய தாக்கம்' என்ற நூலை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட இலங்கை இ.ஜெயராஜ் முதல்பிரதியை பெற்றுக் கொண்டார். | படங்கள் எல்.பாலச்சந்தர்.

ராமேசுவரம்: ''ராமரின் வாழ்க்கையை, சாமானிய மக்கள் மனதிலும் கொண்டு செல்வதில் கம்பர் முன்னோடியாக திகழ்நதார்'' என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ராமேசுவரத்தில் நடைபெற உள்ள கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த ஆளுநரை மாவட்டஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ராமநாதபுரத்திலிருந்து மதியம் பாம்பன் வந்த ஆளுநர் ஆர்.என். ரவி குந்துக்கால் கடற்கரையில் அமைந்துள்ள உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார். அங்கு, ஆளுநரை ராமகிருஷ்ணமடத்தின் ஸ்ரீமத் சுவாமி நியமானந்தா மகராஜ் வரவேற்றார்.

நினைவிடத்தில் விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என். ரவி, அங்கிருந்த ஓவியக் கூடத்தையும், வாசக சாலையும் பார்வையிட்டார். பிறகு சுவாமி விவேகானந்தரின் லட்சியங்கள் மற்றும் போதனைகள், நம்மை எவ்வாறு ஊக்குவித்து, வழிகாட்டி, உற்சாகப்படுத்துகின்றன என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது விவாதித்தார்.

அதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் பிற்பகல் துவங்கிய கம்பன் விழாவில் பங்கேற்று மருத்துவர் இரா.குலசேகரன் எழுதிய 'கம்பனில் இலக்கிய தாக்கம்' என்ற நூலை வெளியிட்டார். இந்நிகழ்வில், கம்பர் பிறந்த தேரழுந்தூர் மற்றும் கம்பர் மறைந்த நாட்டரசன் கோட்டையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் கம்பர் விழா நடத்த வேண்டும், என ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

இலங்கை ஜெயராஜ்க்கு திருஞானசீலர் விருது: பின்னர், கம்பர் புகழை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரப்பபெரும் பங்காற்றிய அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த இ.ஜெயராஜ்க்கு திருஞானசீலர் என்ற விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி விருதை வழங்கினார்.

தொடர்ந்து கம்பன் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது, ''சிறுவயதில் எனது பாட்டி 100 ஆண்டுகளுக்கு முன்பே ராமேசுவரத்திற்கு யாத்திரை வந்தை பற்றியும், இங்குள்ள ராமாயண தொடர்புகளையும் எனக்கு கதைகளாக கூறினார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒருமுறையாவது ராமேசுவரத்திற்கு வந்து வழிபட வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக உள்ளது. நவீன இந்தியாவை உருவாக்கிய அப்துல் கலாமும் இங்கே தான் பிறந்தார்.

கம்பர் கவிஞர் மட்டும் கிடையாது. அவர் ஒரு சித்தர் மற்றும் மகரிஷியும் ஆவார். வால்மீகியின் ராமாயாணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமஸ்கிருதத்தை கற்றவர்களால் மட்டுமே வால்மிகி ராமாயணத்தை படிக்க முடிந்தது. ஆனால் கம்பர், ராமரின் வாழ்க்கையை, சாமானிய மக்கள் மனதிலும் கொண்டு சென்றதில் முன்னோடியாக இருந்தார். கம்பரின் பாரம்பரியம் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும்.

பாம்பன் விவேகானந்தர் நினைவிடத்தில் உரையாற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி.

நாம் வெவ்வேறு மொழி, இனம், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே நாடாக, குடும்பமாக உள்ளோம். நமது பாரத நாட்டின் ஆன்மாகாவ பகவான் ராமர் இருக்கிறார். அவர் நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நாம் உலக பொருளாதாரத்தில் 11வது இடத்திலிருந்து, தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் உலகப் பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். இனிவரும் காலத்தில் 3வது இடத்திற்கு முன்னேறுவோம்'' என ஆளுநர் என்.ஆர். ரவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x