Last Updated : 12 Aug, 2024 07:43 PM

 

Published : 12 Aug 2024 07:43 PM
Last Updated : 12 Aug 2024 07:43 PM

‘என்னை மோசடி செய்தவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’- நீதிமன்றத்தில் நடிகை கவுதமி மனு

ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு வந்த நடிகை கவுதமி.

ராமநாதபுரம்: ரூ.3.16 கோடி நில மோடி வழக்கில் தன்னை ஏமாற்றிய அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று (ஆக.12) ஆஜராகி தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.

தனது சொத்துகளை நிர்வகித்து வந்த காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்ததில் ரூ.3.16 கோடி மோசடி செய்துவிட்டதாக கடந்த மே மாதம் நடிகை கவுதமி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதனடிப்படையில் நடிகை கவுதமி அளித்த புகார் மற்றும் நேரில் ஆஜராகி அளித்த விளக்கத்தின்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 23.05.2024-ல் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் செபி நிறுவனம் பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்த 64 ஏக்கர் நிலத்தை அழகப்பன் வாங்கிக் கொடுத்து ரூ. 3.16 கோடி முறைகேடு செய்ததாகவும், இவ்வழக்கில் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி அழகப்பன், நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், ரமேஷ் சங்கர் சோனாய், பாஸ்கர், விசாலாட்சி ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் ஜே.எம்.எண்.2 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் அழகப்பன், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கவுதமி திங்கள்கிழமை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வழக்கறிஞர் நாராயணன் மூலம் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து குற்றவியல் நடுவர் பிரபாகரன் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் தொடர்புடைய அழகப்பன் நிலமோசடி வழக்கில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வளாகத்தில் நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் எதுவும் கூற முடியாது. எனக்கு நடந்த இந்த அநியாயத்துக்கு எவ்வளவு நாட்கள் ஆனாலும், எவ்வளவு தூரம் சென்றாலும் இறுதிவரை போராடுவேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x