Last Updated : 12 Aug, 2024 03:54 PM

 

Published : 12 Aug 2024 03:54 PM
Last Updated : 12 Aug 2024 03:54 PM

“உக்கடம் சந்திப்பு மேம்பால பணிகள் 88% திமுக ஆட்சியில் தான் நடந்தது”- எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதி வரையிலான மேம்பாலப்பணிகளில் 88 சதவீதம் திமுக ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதிவரை உயர்மட்டப் பாலம் குறித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஆக.18) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்க கடந்த 2020-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் கருத்துரு உருவாக்கப்பட்டது. பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் செறிவு இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 2011 நவம்பர் 14-ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பாலம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்படடது. முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனமில்லாமல், 7 ஆண்டுகள் தாமதத்துக்குப்பின், 2018 ஏப்ரல் 2-ம் தேதி பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது.கோவை மாவட்டத்தில், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 7 ஆண்டுகளாக கோவை மாவட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் காட்டவில்லை. பத்து ஆண்டுகள் தாமதத்துக்குப்பின் 2018-19ம் நிதியாண்டில் 2021 ஜன.24-ம் தேதி பாலத்தை நீட்டித்து மீண்டும் பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த 2021 மே 7-ம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது 12 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்பாலப்பணிகளை விரைவாக முடிக்க என்னிடம் அறிவுறுத்தினார். அதன்படி பலமுறை கோயம்புத்தூர் தளத்துக்கே சென்று, ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதுடன், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகள் வழங்கி செயல்படுத்தியுள்ளேன். என் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, 88 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு ரூ.318 கோடி நிதி திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிந்துள்ளது.

இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரையத்தை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் கடந்த ஆக.9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் பாலம் திறக்கப்பட்டது. இப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது குறித்து பல்வேறு நாளிதழ்கள் பாாட்டியுள்ளதை பொறுக்க முடியாத வேலுமணி, உண்மைக்குப் புறம்பான செய்திகளை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் பல பணிகள் செய்யப்பட்டுள்தை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம். தற்போது நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி ஆக.31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x