Published : 12 Aug 2024 06:39 AM
Last Updated : 12 Aug 2024 06:39 AM

சென்னையில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய திட்டம்

சென்னை: சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில்களில் தினசரி 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

இந்த கருத்துருவுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, 2028-ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளைக் கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, 28 கூடுதல் மெட்ரோ ரயில்களை வாங்க, நிதி ஆயோக் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 6 பெட்டிகள் அல்லது கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 28 கூடுதல் மெட்ரோ ரயில்களை வாங்க ஆசிய வளர்ச்சி வங்கிக்கு நிதி கோரி கடிதம் எழுதப்படும். அடுத்த ஆண்டுக்குள், ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெட்டிகள் தயாரித்து வர 2 ஆண்டுகள் வரை ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x